கால்பந்து மைதானத்தில் பலியானவர்களில் 32 பேர் குழந்தைகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்தோனேசிய அரசு உத்தரவு
நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் 32 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது
குற்றவாளிகளை அடுத்த சில நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறு தேசிய காவல்துறையிடம் கேட்டுக் கொண்டோம் - பாதுகாப்பு அமைச்சர்
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 32 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
ஜாவா மாகாணம் மலாங் நகரில் நடந்த கால்பந்து போட்டியில் 42 ஆயிரம் பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அரேமா அணியின் ரசிகர்கள் ஆவர்.
அரேமா அணி தோல்வியடைந்ததால் அதனை தங்கிக் கொள்ள முடியாமல் கோபமடைந்த ரசிகர்கள், வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது போத்தல்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அதில் இருந்து தப்பிக்க பலரும் முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
மொத்தம் 174 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், 125 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 323 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் 32 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
Reuters
இந்த சம்பவம் கால்பந்தின் இருண்ட நாள் என பிபா தலைவர் தெரிவித்தார். இந்தோனேசியாவின் தலைமை பாதுகாப்பு அமைச்சர் மகுபுத் எம்.டி கூறுகையில், 'குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடுத்த சில நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறு தேசிய காவல்துறையிடம் கேட்டுக் கொண்டோம். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை வெளிக்கொணருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Reuters