ஓடும் பஸ்சில் நடந்த கொடூரம்! 33 பேர் உடல் கருகி பரிதாப பலி.. நடுங்க வைக்கும் சம்பவம்
மாலியில் பேருந்து ஒன்றில் பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்ததில் 33 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இதனால் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மாலி நாடு 2012இல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஐ.நா., பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வீரர்கள் மாலியில் முகாமிட்டிருந்த போதிலும் இனங்களுக்கு இடையே நடந்த வன்முறைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமான மக்கள் வேற வழி இல்லாமல் உயிருக்கு பயந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் மொப்தி மாகாணத்தில் உள்ள சொவிரி பென்டிய்ஹரா நகருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென பேருந்தை வழிமறைத்து டிரைவரை கொடூரமாக கொலை செய்து பேருந்துக்கு இரக்கமின்றி தீ வைத்துள்ளனர்.
இந்த கோர தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 33 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து பொலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.