ஜேர்மனியில் இரண்டாவது பொதுமுடக்கம் முடியும் முன்னரே மூன்றாவது பொதுமுடக்கம்: எச்சரிக்கும் சேன்ஸலர்
ஜேர்மனியில் இரண்டாவது பொதுமுடக்கம் முடியும் முன்பே மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்.
ஜேர்மனியில் புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடர்ந்து, கொரோனாவின் மூன்றாவது அலை ஒன்று பரவும் அபாயம் உள்ளதால், இன்னொரு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்று கூறியுள்ளார் அவர்.
நாட்டில் வெறும் நான்கு சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஜேர்மனியில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆகவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் 7 வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிக்க சேன்ஸலரும் மாகாண தலைவர்களும் முடிவு செய்துள்ளார்கள்.
மார்ச் 1 முதல் முடி திருத்தும் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன என்றாலும், ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 35 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று பரவியுள்ளது என்னும் நிலைமை வந்தால் மட்டுமே, பிற தொழில்கள் துவங்க அனுமதிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.