கலவர பூமியான சிறை.. 43 கைதிகள் மரணம்! 220 பேர் தப்பியோட்டம்
ஈக்குவடார் நாட்டில் நடந்த சிறைக் கலவரத்தில் 43 கைதிகள் பலியான நிலையில், 220 பேர் தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை வேளையில், சாண்டோ டொமிங்கோ நகரில் உள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் இரண்டு கும்பல்கள் மோதிக்கொண்டன.
இதனால் சிறையில் பெரும் கலவரம் உண்டானது. இந்த கலவரத்தில் 43 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 220 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தப்பியோட முயன்ற 112 பேர் பிடிபட்டதாகவும், தப்பியோடியவர்களை கண்டறியும் பணி நடந்து வருவதாகவும் El Universo செய்தித்தாள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிறையின் வெளிப்புற சுற்றளவுக்கு அருகில் தப்ப முயன்ற 40 பேர் பிடிபட்டனர்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் Turi நகரில் உள்ள சிறைச்சாலையில் நடந்த மோதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் Guayaquil நகரில் உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.