ஜேர்மனியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 49 யூரோக்கள் பயணச்சீட்டு: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 49 யூரோக்கள் பயணச்சீட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அதைக்குறித்த ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டம்
ஜேர்மனி, மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் கட்டணத்தில் புதிய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். அந்த பயணச்சீட்டை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் வாங்கியுள்ளதாக ஜேர்மன் பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு, 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து, மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, நாளொன்றிற்கு ஒருவருக்கு பயணம் செய்வதற்கு வெறும் 1.58 யூரோக்கள் மட்டுமே செலவாகும்.
AP Photo
இந்த ஒரே பயணச்சீட்டை வைத்து, அதிவேக மற்றும் தொலைதூர ரயில்கள் தவிர்த்து, மற்ற போக்குவரத்து சாதனங்களில், அதாவது ரயில், பேருந்து மற்றும் ட்ராம்களில் பயணிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
தற்போது வெளியாகியுள்ள ஏமாற்றமளிக்கும் செய்தி
ஆனால், அந்த 49 யூரோக்கள் பயணச்சீட்டின் விலை அதிகரிக்கக்கூடும் என போக்குவரத்து நிறுவன முதலாளிகள் எச்சரித்துள்ளார்கள்.
ஒரு பக்கம் அதிகரிக்கும் பணவீக்கத்தால் போக்குவரத்து நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பயணச்சீட்டுகளால் வரும் வருவாய் குறைவாகவே உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, 2024 ஜனவரியிலிருந்து இந்த 49 யூரோக்கள் பயணச்சீட்டின் விலை அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள் அவர்கள்.
சொல்லப்போனால், எல்லா பயணச்சீட்டுகளின் விலையையுமே அதிகரிக்கவேண்டிவரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.