பிரான்சில் காட்டுத்தீயை மூட்டியதாக சிறார்கள் உட்பட 500 பேர் கைது
Almost 500 arrested on starting wildfires: இந்த கோடையில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்சில் கோடை தொடங்கியதிலிருந்து காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
183 சிறார்கள் உட்பட
வரலாறு காணாத வெப்ப அலைக்கு மத்தியில், ஆறு ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று ஐந்து ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், சுமார் 15 கோடி மக்கள் 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையையும் எதிர்கொண்ட நிலையில்,
பிரான்சில் ஜூலை 1 முதல் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக 183 சிறார்கள் உட்பட 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ வைத்ததாகவும், எஞ்சியவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுவதாக உள்விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஜூலை மாதம் போர்டோ விமான நிலையம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மரணமடைந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், கிட்டத்தட்ட 1,100 ஹெக்டேர் பரப்பளவிலான, எளிதில் தீப்பற்றக்கூடிய பைன் மரக்காடுகளை ஒரு புதிய காட்டுத்தீ அழித்ததைத் தொடர்ந்து, பிரான்சின் தென்மேற்குப் பகுதியான லாண்டெஸில் உள்ள லுக்லான் கிராமத்திலிருந்து 525-க்கும் மேற்பட்ட மக்களை பிரெஞ்சு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியேற்றியுள்ளனர்.

பிரபலமான விடுமுறைத் தலங்களான அர்காச்சோன் வளைகுடா மற்றும் லேஜ்-கேப்-ஃபெரெட் தீபகற்பத்திலிருந்து லுக்லான் கிராமம் சுமார் 62 மைல்கள் தென்கிழக்கில் அமைந்துள்ளது.
இப்பகுதிகளில் ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட இரண்டு பெரும் காட்டுத்தீ சம்பவங்கள் 50,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை அழித்ததால், சுமார் 220,000 மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டு மடங்கு வேகத்தில்
இந்த நிலையில், காலநிலை சீர்குலைவு காரணமாக, அடிக்கடி மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதாகவும், மண் மற்றும் நீர்வழிகள் ஆவியாவதாகவும், காட்டுத்தீ தீவிரமடைவதாகவும், பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் கூடுதலாக மரணமடைவதற்கும் வழிவகுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஐரோப்பா, உலக சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குரோஷியாவில், டால்மேஷியன் கடற்கரையில் உள்ள லோக்வா ரோகோஸ்னிகா என்ற சுற்றுலா நகரத்தில், பலத்த காற்றினால் பரவிய காட்டுத்தீ இரவோடு இரவாகத் தீவிரமடைந்துள்ளது.

இதில் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின, சுமார் 1,000 பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒருவர் மரணமடைந்தார் மற்றும் பல டசின் பேர்கள் காயமடைந்தனர் என்று தீயணைப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கே சுமார் 15.5 மைல் தொலைவில் உள்ள ஸ்பிளிட் நகரில், ஆம்புலன்ஸ் சேவைகளால் சிகிச்சை அளிக்கப்பட்ட 36 பேரில், 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் ஏழு பேருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இதனிடையே, தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத்தீயும் வியாழக்கிழமையன்று மேலும் மோசமடைந்தது. ஹுயெல்வா மாகாணத்தில் இதுவரையில் 31,000 ஹெக்டேர் பரப்பளவை எரித்துள்ள இந்தத் தீ, சுமார் 700 பேரை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |