மாலியில் பயங்கரம்..! 3 கிராமங்களில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: மர்ம நபர்கள் வெறிச்செயல்
நைஜரின் எல்லைக்கு அருகிலுள்ள மத்திய மாலியில் மூன்று கிராமங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர் என்று மாவட்ட நிர்வாகி தெரிவித்துள்ளார்.
அசோங்கோ மாவட்ட நிர்வாகி காவ் பிராந்தியத்தின் ஆளுநருக்கு அனுப்பிய தகவலளின் படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் Ouatagouna, Karou மற்றும் Deouteguef நகரங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டன.
வீடுகள் சூறையாடப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டன மற்றும் கால்நடைகள் கூட்டமாக எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மொத்தம் 51 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இந்த கொடூர தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்த மாலி இராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் Souleymane Dembele, மேலதிக விவரங்களை தெரிவிக்கவில்லை.
மர்ம நபர்க்ள நகரங்களின் நுழைவாயில்களிலிருந்து மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதிச் சடங்குகளுக்கு உதவவும், மக்களுக்கு உறுதுணையாக இருக்கவும் மற்றும் துயரமடைந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் இராணுவத்தின் உதவி வேண்டும் என மாவட்ட நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்.