ஜேர்மன் தூதருக்கு 59 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்: கவனம் ஈர்த்துள்ள இந்தியக் குழந்தை வழக்கு
இந்தியாவுக்கான ஜேர்மன் தூதருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி உட்பட, 59 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
கவனம் ஈர்த்துள்ள வழக்கு
குஜராத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான பவேஷ் ஷாவும் அவரது மனைவியான தாராவும், 2018ஆம் ஆண்டு ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு குடிபெயர்ந்தார்கள். 2021ஆம் ஆண்டு, தம்பதியருக்கு அரிஹா என்னும் பெண் குழந்தை பிறந்தது.
பேத்தியைப் பார்ப்பதற்காக அரிஹாவின் பாட்டி இந்தியாவிலிருந்து ஜேர்மனி வந்துள்ளார். அப்போது, ஒரு நாள், எதிர்பாராதவிதமாக பாட்டியால் குழந்தைக்கு காயம் ஏற்படவே, குழந்தையை மருத்துவமனைக்குக்கொண்டு சென்றுள்ளனர்.
Twitter/@Ariha_Mothe
குழந்தையின் பாலுறுப்பில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, குழந்தையை கைப்பற்றி, அரசு காப்பகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் அதிகாரிகள்.
அரிஹாவின் பெற்றோர் மீது, பாலியல் துஷ்பிரயோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
59 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
ஏழு மாதக் குழந்தையாக இருக்கும்போது அரிஹா தன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டாள். விசாரணையைத் தொடர்ந்து பவேஷ், தாரா தம்பதியர் மீது தவறு இல்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்பட்டாலும், குழந்தையை அவர்கள் கவனக்குறைவாகக் கையாண்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.
இந்த விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து ஜேர்மனிக்கு அழுத்தம் கொடுக்க, 2022ஆம் ஆண்டு, நீதிமன்றத்தால் அமர்த்தப்பட்ட மன நல ஆலோசகர்கள், அரிஹாவின் பெற்றோரை மீளாய்வுக்கு உட்படுத்தினார்கள். மீளாய்வின் முடிவில், குழந்தை, பெற்றோரில் ஒருவரின் கண்காணிப்பில், பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கான காப்பகம் ஒன்றில் இருக்கவேண்டும் என்றும், பெற்றோரில் மற்றவர் அந்தக் குழந்தையை அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
Free Press Journal
குழந்தை காப்பகம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால், அவளது பெற்றோரின் விசா காலாவதியாக இருந்ததால், அவர்கள் குழந்தையை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார்கள். இப்போது அரிஹா இரண்டு வயதைக் கடந்துவிட்டாள்.
இந்நிலையில், அரிஹாவை இந்தியாவுக்கு அனுப்பவேண்டும் என்று கோரி, வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 59 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான Philipp Ackermanக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அரிஹா ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஜெயின்கள் மாமிச உணவு உண்ணாதவர்கள். ஆனால், ஜேர்மன் காப்பகத்தில் அரிஹாவுக்கு மாமிச உணவு வழங்கப்படுகிறதாம்.
Firstpost
ஆகவே, அது அவர்களுடைய கலாச்சாரத்துக்கு எதிரானது. அது இந்தியாவில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழந்தையை இந்தியாவுக்கு அனுப்புங்கள், ஜேர்மன் அரசால் அமர்த்தப்பட்ட மன நல அதிகாரிகளின் பரிந்துரையை மதிக்கும் வகையில் இந்தியாவில், இந்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் குழந்தை இருக்கட்டும் என்று கோரி ஜேர்மன் தூதருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
அரிஹாவின் பெற்றோரோ, எங்களை சிறையில் வேண்டுமென்றாலும் போடுங்கள், அரிஹாவை இந்தியாவுக்கு அனுப்பினால் போதும் என்று கோரியுள்ளார்கள். ஏனென்றால், அவள் இல்லாத வீடே சிறை போலத்தான் உள்ளது என்கிறார்கள் அவர்கள்.