விமானங்களை ஆபத்துக்குள்ளாக்கும் 5G Network! அதன் காரணமாக ரத்தாகும் விமானங்கள்
Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது. இந்த நிலையில் 5G Network அலைவரிசைகள் விமானத்தில் உள்ள அல்டிமீட்டர்கள் போன்ற கருவிகளில் இடையூறு ஏற்படுத்த கூடும் என அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது.
அல்டிமீட்டர்கள் (உயரமானிகள்) என்பது விமானங்களின் உயரத்தை அதாவது, தரையில் இருந்து மேல பறக்கும் விமானத்தின் உயரத்தை அளவிடும் கருவி. இவற்றில் 5G Network அலைவரிசைகள் இடையூறு செய்தால் விமானத்தில் உள்ள அல்டிமீட்டர்களில் துல்லியத்தன்மையை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஃப்ஏஏ-வின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா, ஆல் நிப்பான் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சில விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்தன.
இத்தகைய விமான சேவை சிக்கல்கள் 5G Network பயன்பாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு விமான நிறுவனங்கள் அச்சம் அடைந்து விமான சேவையை நிறுத்தியுள்ள நிலையில், விர்ஜின் அட்லாண்டிக், ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் போன்ற நிறுவனங்கள் எந்த ஒரு விமான சேவையையும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.