பிரான்சில் மீண்டும் ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட ஆறு பேர் கைது
பிரான்ஸ் நாட்டின் பிரபல அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெரிய கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மீண்டும் ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம்
பிரான்சிலுள்ள Lyon நகரில் அரிய உலோகங்களான தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்களை சுத்திகரிக்கும் Pourquery Laboratories என்னும் நிறுவனம் அமைந்துள்ளது.

நேற்று முன்தினம், அந்த நிறுவனத்தின் சுவரை வெடிகுண்டு வைத்து தகர்த்த சிலர், கட்டிடத்துக்குள் நுழைந்து 13.8 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான தங்கம் மற்றும் பிற உலோகங்களைக் கொள்ளையடித்துள்ளனர்.
அந்த வெடிவிபத்தில் அந்த நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் பார்த்துக்கொண்டிருக்க, கொள்ளையடித்த பொருட்களை சூட்கேசில் வைத்து வெள்ளை நிற வேன் ஒன்றில் அடுக்கிவைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர் அந்தக் கொள்ளையர்கள்.
இந்தக் காட்சிகளை மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வலம்வருகின்றன.
இந்நிலையில், கொள்ளைச் சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார், கொள்ளையர்களின் வேனை துரத்திப் பிடித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 13.8 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான அரிய உலோகங்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் அடக்கம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Louvre அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெரிய கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |