ராணுவ தளத்தின் ஆயுத கிடங்கில் பயங்கர வெடிவிபத்து: 6 பேர் பலி.. மேலும் பலர் இறந்திருக்கலாம் என அச்சம்
ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலி மற்றும் 32 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏமனின் தெற்கு மாகாணமான அபியனில் உள்ள ஆயுதக் கிடங்கில் நேற்றைய தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 32 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
எனினும், பலருக்கு ஆபத்தான காயங்கள் உள்ளன எனவும், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சுவதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அரசுப்படைகளுக்கு சொந்தமான இந்த ஆயுத கிடங்கில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்படுகிறது. இவை லாவ்டாரில் உள்ள சந்தையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் உள்ள மீன் சந்தையில், நபர் ஒருவர் கைக்குண்டை வீசியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.