திருமண நிகழ்வுக்கு சென்று திரும்பிய குடும்பம்! வழியில் நேர்ந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
பாகிஸ்தானில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரத்தில் வசிக்கும் ஏழு பேர் சேர்ந்த குடும்பத்தினர் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு திருமணத்தில் பங்கேற்று வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
மேலும் இந்த விபத்து நள்ளிரவில் நடந்ததால் யாருக்கும் விபத்து நடந்தது குறித்து தெரியவில்லை. இதையடுத்து நேற்று ஆற்றில் கார் அடித்து செல்வதாக மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான காரை மீட்பு குழு அதிகாரிகள் மீட்டனர். அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் என 7 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.