பள்ளி மாணவிகள் 80 பேருக்கு விஷம் வைப்பு: ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ள பயங்கரம்
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் குறைந்தது 80 பள்ளி சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமை
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான்களின் கையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றதில் இருந்து பெண்களுக்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் பெரும்பாலான பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், பொது இடங்களுக்கு தனியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அத்துடன் பெண்கள் 6ம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் பெண்களின் எதிர்காலம் பெரும் கேள்விக் குறியாகியுள்ளது. இதற்கிடையில் தாலிபான் அரசிடம் ஐ.நா-வும் தொடர்ந்து பெண்கள் கல்வி உரிமை குறித்து அறிவுறுத்தி வருகிறது.
விஷம் வைக்கப்பட்ட 80 பள்ளி சிறுமிகள்
இந்நிலையில் வடக்கு ஆப்கானிஸ்தானின் சார்-இ-புல் மாகாணத்தின் சங்கராக் மாவட்டத்தில் உள்ள நஸ்வான்-இ-கபோத் ஆப் பெண்கள் பள்ளி மற்றும் நஸ்வான்-இ-ஃபைசாபாத் பெண்கள் பள்ளியில் உள்ள குறைந்தது 80 பள்ளி சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இதில் நஸ்வான்-இ-கபோத் ஆப் பெண்கள் பள்ளியில் மட்டும் 60 சிறுமிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர், கிட்டத்தட்ட 17 சிறுமிகள் வரை நஸ்வான்-இ-ஃபைசாபாத் பெண்கள் பள்ளியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட இந்த இரண்டு பள்ளிகளும் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளுக்கு எவ்வாறு விஷம் வைக்கப்பட்டது என்ற தகவலை அதிகாரிகள் வழங்கவில்லை, அதே சமயம் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அவருடைய தனிப்பட்ட விரோதம் இருந்ததாக தெரிவித்துள்ளனர், ஆனால் அது குறித்தும் கல்வி துறை அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.