900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் தீயில் எரிந்து நாசம்
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் தீயில் எரிந்து நாசமானது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிவருகின்றன.
சீனாவின் மிக நீளமான மர வளைவுப் பாலமான வான்'ஆன் (Wan'an) பாலம் ஆகஸ்ட் 6-ஆம் திகதி இரவு தீயில் எரிந்து நாசமானது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது புஜியான் மாகாணத்தின் பிங்னான் பகுதியில் சாங் வம்ச காலத்தில் (960-1127 CE) கட்டப்பட்டது, மேலும் 900 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த பிங்னன் கவுண்டி பொதுப் பாதுகாப்புப் பணியகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
900 ஆண்டுகள் பழமையான மரப்பாலத்தின் முக்கிய பகுதி தீ ஏற்பட்ட முதல் 20 நிமிடங்களில் இடிந்து விழுந்ததாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாலத்தின் தீ சுமார் 10 மணி நேரத்தில் அணைக்கப்பட்டாலும், அதன் தனித்துவமான மர அமைப்பு தீயால் சேதமடையக்கூடியதாக இருந்தது.
யுனிவர்சல் பீஸ் பாலம் என்றும் குறிப்பிடப்படும் வான்'ஆன் பாலம், சீனாவின் மிக நீளமான மர வளைவுப் பாலமாகும், இது 98.2 மீட்டர் நீளம் கொண்டது.
2006-ஆம் ஆண்டில், சீனா அதன் விலைமதிப்பற்ற கலாச்சார கலைப் பொருட்களின் பட்டியலில் பாலத்தை சேர்த்தது.
யுனெஸ்கோவின் கூற்றுப்படி, புஜியனின் மர வளைவுப் பாலங்கள் நீண்ட காலமாக "உள்ளூர்வாசிகள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், தங்களை மகிழ்விக்கவும், வழிபாட்டில் ஈடுபடவும், உறவுகள் மற்றும் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்தவும் குறிப்பிடத்தக்க ஒன்றுகூடும் இடமாக இருந்தது.