லொட்டரியில் பெருந்தொகை வென்ற தம்பதியர்... தெரிவிக்கும் எச்சரிக்கை செய்தி
லொட்டரியில் பெருந்தொகை வென்ற சிலர் உடனடியாக அந்த பரிசுத்தொகையை வாங்காமல் காலம் தாழ்த்துவது, முகமூடி அணிந்து பரிசை வாங்கிச் செல்வது, தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொள்வது என பல விடயங்கள் குறித்து நாம் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்கிறோம்.
ஆனால், அவர்கள் அப்படிச் செய்வதற்கு நியாமான காரணங்கள் உள்ளன என்பதை உறுதி செய்யும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில், விமானப்படையில் பணி செய்து ஓய்வு பெற்ற Dave Harrig என்பவருக்கு லொட்டரியில் பெருந்தொகை ஒன்று பரிசாக கிடைத்தது. அடுத்த நாள் முதல், அவர் வீட்டுக்கு ஏராளமான கடிதங்கள் வரத் துவங்கின. என் பிள்ளைக்கு உடல் நலமில்லை, வேலை போய்விட்டது, என் வீடு தீயில் எரிந்து நாசமாகிவிட்டது என பல்வேறு காரணங்களைக் கூறி மக்கள் அவரிடம் பணம் கேட்டு எழுதிய கடிதங்கள் அவை.
கொஞ்ச நாட்களில் Dave மற்றும் அவரது மனைவி Erica Harrigஐக் குறித்த வதந்திகள் பரவத் துவங்கின. Daveஇன் மனைவி அவரை விட்டுவிட்டு ஒரு மருத்துவருடன் ஓடிப்போய்விட்டதாகவும், Daveக்கும் சட்டத்தரணியான ஒரு இளம்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கதைகள் உலாவரத் துவங்க, பள்ளியில் அவரது பிள்ளைகள் சீண்டப்பட்டிருக்கிறார்கள்.
Andrew Whittaker Jr என்பவருக்கு இதேபோல மிகப்பெரிய தொகை ஒன்று லொட்டரியில் கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் மதுவுக்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகிப்போயுள்ளார் அவர். குடும்பத்தில் தொடர்ச்சியாக பல இழப்புகள்... கடைசியாக தனது அன்பு பேத்தியின் மரணத்தையும் பார்த்தபிறகே மரணமடைந்திருக்கிறார் Andrew.
Manuel Franco என்பவரும் லொட்டரியில் பெருந்தொகை ஒன்றை வென்றிருக்கிறார். தனது வெற்றியை ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார் அவர். அவ்வளவுதான், அதற்குப் பிறகு தெரிந்தவர்கள் தெரியாதவர்களிலிருந்து, ஊடகங்கள் வரை அவருக்கு கொடுத்த தொல்லை தாங்காமல் ஒரு கட்டத்தில் தலைமறைவாகிவிட்டாராம் Manuel.
ஆனால், அவருக்கு பிரச்சினை முடிந்தாலும், அவரால் புதிதாக பிரச்சினை உருவாகியுள்ளது. Manuel எழுதியது போல் பலருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் தான் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவர்களைத் தேர்வு செய்துள்ளதாக Manuel எழுதுவது போல குறிப்பிடப்பட்டிருக்க, அதை நம்பிய பலரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், Barry, Jenny Chuwen என்னும் பிரித்தானிய தம்பதியருக்கு லொட்டரியில் 4.6 மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்ததைத் தொடர்ந்து மன அழுத்ததுக்கு ஆளாகி, கடைசியில் கணவனும் மனைவியும் பிரிந்ததைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
Image - globalnews
ஆனால், நாம் செய்தியின் ஆரம்பத்தில் சந்தித்த Dave மற்றும் Erica Harrig தம்பதியர், தாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த பிறகும், அவற்றிலிருந்து தாங்கள் பாடம் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார்கள்.
ஆக, திடீரென ஒரு பெரும் தொகை லொட்டரியில் பரிசாக கிடைத்தாலும், கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வில் வரும் பிரச்சினைகளை கவனமாக எதிர்கொள்ளவேண்டும். பணம் வந்தவுடனேயே நமது பெயர் கெடுவதற்கும், போதை போன்ற விடயங்களுக்கு அடிமைப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் நாம் கவனமாக இருந்தால் அவைகளை மேற்கொண்டு விடலாம் என்கிறார்கள் Dave, Erica தம்பதியர்.
ஆம், பணம் வந்தாலும், அவர்கள் இன்னமும் தங்கள் சமுதாயம், தங்கள் தேவாலயம், குடும்பத்தினர், நண்பர்கள் என அதே வட்டத்தில் வாழ்வதுடன், கடின உழைப்பையும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.