சீருடை அணிந்து மகனுக்கு சல்யூட் வைக்கும் தந்தை... ஒரு நெகிழ்ச்சி வீடியோ
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’
’மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்’
இந்த திருக்குறள்கள், பிள்ளைகள் ஒரு நல்ல நிலைக்கு வரும்போது, அல்லது எதையோ சாதிக்கும்போது பெற்றோர் உணரும் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் குறள்கள் ஆகும். இவை தமிழர்கள் நன்கறிந்த திருக்குறள்கள்.
ஆனால், இவை பற்றி கேள்விப்பட்டிருக்கும் வாய்ப்பு இல்லாத ஒரு வெளிநாட்டுத் தந்தை, தன் மகன் தன் கண் முன்னால் ஒரு இராணுவ வீரனாக நிற்பது கண்டு பெருமிதம் கொண்டு, கண் கலங்கி அவனுக்கு வீரவணக்கம் செலுத்தும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.
அது சரி, எந்த நாடாக இருந்தாலும் தந்தை தந்தைதான், தாய் தாய்தானே! வெளியாகியுள்ள அந்த வீடியோவில், Fisher எனும் அந்த தந்தை, தன் மகனிடம் இப்படிக் கூறுகிறார்.
‘பிறந்த நாள் முதல் உன் வளர்ச்சியை கவனித்து வந்திருக்கிறேன். நீ எப்போதுமே மரியாதையுள்ள ஒரு பிள்ளை, உன் தந்தையிடமானாலும் சரி, தாயிடமானாலும் சரி, மிகவும் மரியாதை செலுத்தியிருக்கிறாய். சல்யூட் என்பது, மரியதையின் ஒரு அடையாளம், உன் முதல் சல்யூட்டை உனக்கு அளித்து உன்னை மரியாதை செய்வதை நான் பாக்கியமாக கருதுகிறேன், என்று கூறி கண் கலங்கி, கம்பீரமாக அவர் தன் மகனுக்கு ஒரு சல்யூட் வைக்க, அவரது மகனும் நெகிழ்ந்துபோய், ஆனாலும் கம்பீரமாக தன் தந்தைக்கு ஒரு சல்யூட் வைக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு சமூக ஊடகத்தில் மட்டும் 4 மில்லியன் பேர் இந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ளார்கள். வீடியோவைப் பார்வையிட்ட பலரும் நெகிழ்ந்துபோய், அந்த வீடியோவைப் பார்க்கும்போது தங்களையறியாமலே கண்கலங்கியதாக தெரிவித்துள்ளார்கள்.
