சுவிட்சர்லாந்துக்கு சென்று தற்கொலை: அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்தாரியின் பகீர் திட்டம்
அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலுக்கு பின்னர் சுவிட்சர்லாந்துக்கு தப்ப முயன்ற டிரம்ப் ஆதரவாளர் ஒருவரை நியூயார்க் நகர பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த அந்த புவி இயற்பியலாளர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலில், ஜெஃப்ரி சபோல் என்ற அந்த 51 வயதான நபர் சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்துடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை பகல் ஜெஃப்ரி சபோல் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது அமைதியைக் குலைப்பதும் கவலையளிப்பதுமான செயல் என குறிப்பிட்ட நீதிபதி, சபோல் நாட்டை விட்டு வெளியேறும் மன நிலையில் இருப்பதால் அவருக்கு பிணை வழங்க முடியாது என தீர்ப்பளித்துள்ளார்.
நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்குப் பிறகு சபோல் போஸ்டனில் இருந்து சூரிச் செல்லும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்களில் ஒருவரான சபோல், பொலிஸ் அதிகாரி ஒருவரை மாடிப்படி வழியாக இழுத்து கீழே கொண்டு சென்றதும், அவரை மூர்க்கத்தனமாக தாக்கியதும் கமெராவில் பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் என்ன நடந்தது என்பது தமக்கு நினைவில் இல்லை என குறிப்பிட்ட சபோல், ஆனால் சம்பவத்தன்று தாம் மிகவும் கோபமாகவும், கடும் ஆத்திரத்திலும் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது சபோலுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் நடந்த கலவரம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி பைடன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

