கண்டிப்பாக முடியாது... திட்டவட்டமாக அறிவித்த டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் தாம் கண்டிப்பாக கலந்துகொள்வதில்லை என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியினருக்கு அமைதியான முறையில் அதிகாரத்தை கை மாற்றுவதாக குடியரசுக் கட்சித் தலைவர்கள் உறுதியளித்த சில மணி நேரங்களில், டொனால்டு டிரம்ப் தமது முடிவை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பொதுவாக ஜனவரி 20 அன்று நடக்கும் விமரிசையான பதவியேற்பு நிகழ்வில் புதிய ஜனாதிபதியுடன், முன்னாள் ஜனாதிபதிகளும் பதவியை துறக்கும் ஜனாதிபதியும் கலந்து கொள்வது மரபாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ள மறுத்திருப்பது, இதற்கு முன்னர் ஜனாதிபதிகளாக இருந்து தங்களது பதவியை துறந்த ஜான் ஆடம்ஸ், ஜான் குயின்சி ஆடம்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ஜான்சன் ஆகியோருக்குப் பிறகு,
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்த நான்காவது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் பதிவு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்ட கலவரத்திற்கு பின்னர், டிரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டது.
அதன் பின்னர் முதன் முறையாக பதிவு செய்த அவர், கலவரக்காரர்களை ஆதரித்ததுடன், அனைவரின் கேள்விக்குமான பதில் இதுதான் என குறிப்பிட்டு, ஜனவரி 20 அன்று பதவியேற்பு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தன்று டொனால்டு டிரம்ப் தலைநகரில் இருப்பாரா அல்லது, வெளியே செல்வாரா என்பது தொடர்பில் தற்போது விவாதம் நடப்பதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் தமது சொந்த மாகாணமான புளோரிடா செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஸ்கொட்லாந்தில் உள்ள தமது டர்ன்பெர்ரி கோல்ஃப் ரிசார்ட்டுக்கு அவர் செல்ல வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் கூறப்பட்டது.
ஆனால் ஸ்கொட்லாந்து நிர்வாகம் அந்த முடிவை கடுமையாக எதிர்த்ததுடன், தற்போதைய சூழலில் டொனால்டு டிரம்ப் மட்டுமல்ல எவரையும் வரவேற்க தயாராக இல்லை என்றும் காட்டமாக பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
