உக்ரைனிலிருந்து உணவு தானியங்களை வெளியே கொண்டு வர அதிரடி திட்டம் தயார்
உக்ரைன் போரால் உலகம் உணவுப் பற்றாக்குறையில் அவதியுறுவதைத் தடுக்க அதிரடி திட்டம் ஒன்று தயாராகி வருகிறது.
ஐரோப்பாவின் உணவுக்கூடை என அழைக்கப்படும் உக்ரைன், உலக நாடுகள் பலவற்றிற்கு கோதுமை முதலான தானியங்கள், சமையல் எண்ணெய் முதலானவற்றை பெருமளவில் ஏற்றுமதி செய்துவந்தது.
ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா எதிர்பாராதவிதமாக திடீரென போர் தொடுத்தது. ரஷ்ய போர்க்கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களை சுற்றி வளைத்தன. அதனால் உக்ரைனிலிருந்து கோதுமை முதலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.
பணக்கார நாடுகள் எப்படியாவது சமாளித்துக்கொள்ளும். ஆனால், ஏழை நாடுகள் உணவு தானியங்கள் இல்லாவிட்டால் என்ன செய்யும். ஆக, உலக நாடுகள் பலவற்றில் உணவு தானியங்கள் தட்டுப்பாடு ஏற்படும் ஒரு பயங்கர நிலைமை உருவாகிவருகிறது.
இந்நிலையில், உக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் முதலான பொருட்களை வெளியே கொண்டு வர அதிரடி திட்டம் ஒன்று உருவாகி வருகிறது.
அது என்னவென்றால், உக்ரைன் துறைமுகங்களில் வழியை மறித்துக்கொண்டு கருங்கடலில் நிற்கும் ரஷ்ய போர்க்கப்பல்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டு, தானியத்தை வெளியே கொண்டு வரும் அதிரடி திட்டமாகும்.
அதாவது, ரஷ்யாவின் போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதுதான் திட்டம். உக்ரைன் ரஷ்யாவுடைய ஒரு மாஸ்க்வா கப்பலை மூழ்கடித்ததற்கே ரஷ்யா கதிகலங்கிப் போனது. ஆகவே, ரஷ்யாவின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் தாக்கினால், அவை உக்ரைன் துறைமுகத்திலிருந்து பின்வாங்கலாம். அப்போது உக்ரைனிலிருந்து ஓரளவு தானியங்களை வெளியே கொண்டு வரலாம் என்பதுதான் திட்டம்!
ஆக, ரஷ்ய போர்க்கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கக்கூடிய ஏவுகணைகளை அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கவேண்டும்.
ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது போல, முதலில் யார் அந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது என சில நாடுகள் தயங்கி நிற்கின்றன. தாங்கள் உக்ரைனுக்கு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்கினால், ரஷ்யாவின் கோபம் தங்கள் மீது திரும்பிவிடுமே, தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்குவதா என்ற கேள்வி பல நாடுகளுக்கு இருக்கிறது.
இந்நிலையில், முதலில் உக்ரைனுக்கு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.