இந்த நாட்டில் 95% மக்களுக்கு சரியான உணவு இல்லை! உலகளவில் 400 லட்சம் கோடி டொலர் சொத்து இருந்தும் என்ன பயன்?: ஐ.நா
ஆப்கானிஸ்தானில் 95 சதவீத மக்களுக்கு போதுமான உணவு இல்லை என ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தாலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
இந்த பூமியில் மிகவும் மோசமான மனிதநேயப் பிரச்சினைகளை ஆப்கானிஸ்தான் சந்தித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களில் 95 சதவீதம் பேருக்கு போதுமான உணவு இல்லை.
2.30 கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். நினைத்துப் பாருங்கள், உணவில்லாமல் உங்கள் பேரன் பேத்திகள், குழந்தைகள் மரணத்தை எதிர்கொண்டால் உங்களால் முடிந்தததை அனைத்தையும் செய்வீர்கள்தானே. உலகளவில் நம்மிடம் 400 லட்சம் கோடி டொலர் சொத்து இருந்தும் என்ன பயன்.
நமக்கு வெட்கமாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் அங்குமக்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலக நாடுகள் மனிதநேய உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார்.