தாலிபான்களால் நமக்கு என்ன ஆகுமோ என பீதியில் இருந்த அந்நாட்டு இளம் வீராங்கனைகள்! பிரிட்டனில் இருந்து கிடைத்த ஒரு அற்புத உதவி.. புகைப்படங்கள்
தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளனர், இதற்கு பிரித்தானியாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் உதவி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது தாலிபான் பயங்கரவாதிகள் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது. கடந்த முறை ஆட்சியைப் போல் இல்லாமல் இந்த முறை பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்று தாலிபான்கள் தெரிவித்தனர்.
ஆனால், தாலிபான்கள் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து திடீரென மாறி, பெண்கள் வேலைக்குச் செல்லவும், ஆடவர்களுடன் சேர்ந்து கல்வி பயிலவும் தடை விதித்தனர். குறிப்பாக, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளனர்.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் விளையாட்டு வீராங்கனைகள் பலர் தாலிபான்களால் தங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் கத்தாருக்குப் பயிற்சிக்காகச் செல்ல திட்டமிட்டிருந்தனர். காபூல் விமான நிலையத்தில் கடந்த மாதம் 26-ம் திகதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கன் மக்கள் 170 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின் நிராதரவாக இருந்த கால்பந்து வீராங்கனைகள் 32 பேர், எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்தனர். அதுமட்டுமல்லாமல் விளையாட்டில் பெண்கள் பங்கேற்கத் தலிபான்கள் தடை விதித்ததால், கால்பந்து வீராங்கனைகளுக்குப் பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரித்தானியாவை சேர்ந்த அமைதிக்கான கால்பந்து எனும் தொண்டு நிறுவனம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 32 கால்பந்து வீராங்கனைகள், அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பாகிஸ்தான் அரசின் உதவியுடன் அந்நாட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.
ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.