சிறுவர்கள் இருவரை கம்பத்தில் கட்டிவைத்து பின்னியெடுத்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ரொட்டியை திருடியதாக கூறி தாலிபான்கள் இரு சிறுவர்களை கம்பத்தில் கட்டிவைத்து பின்னியெடுத்துள்ளனர். தங்கள் குடும்பத்தினர் பட்டினியாக கிடப்பது பொறுக்க முடியாமலையே குறித்த சிறுவர்கள் இருவரும் ரொட்டியை திருடியதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், புதிய ஆட்சியையும் அமைத்துள்ளனர். தங்களின் ஆட்சி உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையும் என குறிப்பிட்டிருந்த தாலிபான்கள், தற்போது தங்களின் அடிப்படைவாத குணத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
கொடூர தண்டனைகள் வழங்கப்படும் என கடந்த வாரம் அறிவித்திருந்ததுடன், பரபரப்பான சாலையில் சடலங்களை தொங்கவிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இரு சிறுவர்களை கம்பத்தில் கட்டிவைத்து தாலிபான் கடுமையாக தாக்கியுள்ளனர். ரொட்டி திருடர்களுக்கு தாலிபான்கள் தக்க தண்டனை அளித்துள்ளனர் என்றே குறித்த புகைப்படத்தை பகிர்ந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தாலிபான்களால் தாக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர், கடந்த 3 நாட்களாக எனது குடும்பம் பட்டினியால் தவித்து வருகிறது. நான் திருடியது உண்மை தான், ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.
வேலை இல்லை, உணவும் இல்லை, குடும்பம் பட்டினியால் தவிப்பது கண்டு என்னால் பொறுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். உலக உணவுத் திட்டத்தின் படி 93 சதவிகித ஆப்கானியர்கள் சாப்பிட போதுமான உணவு கிடைக்கவில்லை எனவும் ஆப்கானிஸ்தான் பட்டினி நெருக்கடியை எதிர்கொள்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர் மற்றும் தாலிபான்கள் கையகப்படுத்தியதால் வங்கிகள் மூடப்பட்டு வணிகங்கள் முடங்கிப்போயுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.