இரத்தம் சிந்திய காலங்கள் முடிந்துவிட்டன... நாடு திரும்புங்கள்: தாலிபான் பிரதமர் அழைப்பு
ஆப்கானிஸ்தானில் ரத்தம் சிந்திய காலங்கள் முடிந்து விட்டதாகவும், அனைவரும் நாடு திரும்புங்கள் எனவும் கூறி தாலிபான்களின் இடைக்கால பிரதமர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை நிறுவும் பணியில் தாலிபான்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஹசன் அகுந்த் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசில் பணியாற்றி ஊழியர்கள் அனைவரும் தைரியமாக நாடு திரும்பலாம். தூதரகங்களுங்கும், தூதரக அதிகாரிகளுக்கும் முழு பாதுகாப்பை நாங்கள் வாக்குறுதியாக அளிக்கிறோம்.
உயிர்ப் பலியும், நிதி இழப்பும் நாங்கள் எங்கள் கடந்த காலங்களில் நிறையவே சந்தித்துவிட்டோம். ஆப்கானிஸ்தானில் ரத்தம் சிந்திய காலமும், படுகொலைகள் நடந்த காலங்களும் முடிந்துவிட்டன. அதற்கான விலையை நாங்கள் கொடுத்துவிட்டோம்.
தாலிபான் படையினர் இப்போது பண்படுத்தப்பட்டுள்ளனர். இங்கே இதுவரை யாரையும் பழிதீர்க்கும் வகையில் படையினர் கொலை செய்யவில்லை. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டப்படி நல்லது நடக்க வேண்டும். வெற்றிகள் வாய்க்கப்பெற வேண்டும். நலத்திட்டங்கள் நடைபெற வேண்டும்.
ஆகையால் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த முயற்சியில், அனைவரும் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் அமெரிக்காவுடன் இணக்கமாகப் பணியாற்றியிருந்தாலும் கூட பொது மன்னிப்பு அளிக்கப்படும்.
அனைவரும் தாயகம் திரும்பவும் என்று அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, தாலிபான்கள் 33 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்துள்ளனர். இதில், 14 பேர் 1996ல் தாலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்றவர்கள். 5 பேர் க்யூபாவில் உள்ள அமெரிக்காவின் குவான்டனாமோ சிறையில் இருந்தவர்கள், 12 பேர் இரண்டாம் தலைமுறை தாலிபான்கள்.
அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர், ஆகஸ்ட் 15 ம் திகதி தொடங்கி 30ம் திகதிக்குள் 1.50 லட்சம் பேர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர்.
இவர்களில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர். அத்துடன் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சி ஆப்கன் மக்களும் பெருமளவில் வெளியேறினர். குறிப்பாக அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.