பிரித்தானியாவில் பயணிகள் விமானத்தை கடத்தியவர்... 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை
-2000 ஆம் ஆண்டு பயணிகள் விமானத்தை கடத்தி மூன்று நாள் சிறை வைத்தவர் முகமது சஃபி
-விமான கடத்தல் வழக்கில் தண்டனையில் இருந்து தப்பியவர் மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் சிக்கினார்
பிரித்தானியாவில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் விமானத்தை கடத்தி அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆப்கான் நாட்டவர், மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் சிக்கியுள்ளார்.
குறித்த நபருக்கு லண்டன் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. தற்போது 54 வயதாகும் முகமது சஃபி உட்பட்ட 9 பேர் கொண்ட குழு கடந்த 2000 ஆண்டில் 156 பயணிகளுடன் துப்பாக்கி முனையில் விமானத்தை கடத்தியதுடன், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் மூன்று நாள் சிறைவைத்து பெரும் களேபரத்தை ஏற்படுத்தினர்.
இருப்பினும் பிரித்தானிய அரசாங்கம் சஃபியின் புகலிடக் கோரிக்கையை அப்போது ஏற்றுக்கொண்டது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் 2006ல் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த தீர்ப்பில், கடத்தல்காரர்கள் பிரித்தானியாவில் தங்கலாம் என குறிப்பிட்டார்.
@Reuters
இந்த தீர்ப்புக்கு அப்போதைய பிரதமர் டோனி பிளேயர் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தமது மனைவியை கோடாரியால் வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் கிரவுன் நீதிமன்றம் ஆயுள் தண்டனைக்கு விதித்துள்ளது.
மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லோவில் உள்ள குடும்ப வீட்டில் அவரது மனைவி லீனா( 41)வை கோடாரியால் தாக்கி கொல்ல முயன்றுள்ளார். மட்டுமின்றி, தாயாரை காப்பாற்ற முயன்ற அவரது மகள் 20 வயது மீனா என்பவரை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார் சஃபி.
@Evidence
இந்த வழக்கில் சஃபியை குற்றவாளி என கிரவுன் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்தது. இதனையடுத்து மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகளை கடித்து காயப்படுத்திய வழக்கில் 24 மாதங்கள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னர் விமானம் கடத்தப்பட்ட வழக்கில் சஃபியுடனான 9 பேர்களுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 2003ல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை நீதிபதி பிழை செய்துள்ளதாக குறிப்பிட்டு தண்டனைகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
@AP