பிரித்தானியாவின் சிறிய தவறு: நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு உலை வைத்த மின்னஞ்சல்
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் ஊழியர் ஒருவர் ஆப்கானிஸ்தான் மொழிப்பெயர்ப்பாளர்கள் நூற்றுக்கணக்கானோரின் தனிப்பட்ட விவரங்களை மின்னஞ்சலில் நகலெடுத்த விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பிரித்தானியாவுக்கான மொழிப்பெயர்ப்பாளர்களாக செயல்பட்ட 250 ஆப்கன் மக்களின் உயிருக்கு தாலிபான்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த முட்டாள்த்தனமான நடவடிக்கையால் கொதித்துப் போயுள்ள பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த மின்னஞ்சலில் தொடர்புடைய ஆப்கானிஸ்தானியர்களின் மொத்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய ராணுவத்திற்காக பணியாற்றிய இந்த 250 மொழிபெயர்ப்பாளர்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற கோரியிருந்த நிலையில், இவர்களின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் தகவல் கேட்டிருந்த நிலையிலேயே இந்த தவறு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த தகவல்களில் பலரது புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இணைக்கப்பட்டிருப்பதால் தாலிபான்களால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டன.
ஆனால் தாலிபான்களின் காலக்கெடு காரணமாக அந்த வெளியேற்றும் நடவடிக்கை பாதியிலேயே கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனாலையே, நூற்றுக்கணக்கானோர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடியாமல் போயுள்ளனர்.
தற்போது பிரித்தானியாவுக்காக பணியாற்றி வந்த பல மொழிப்பெயர்ப்பாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பயந்து வாழ்வதாகவும், பலர் தாலிபான்களின் கண்ணில் படாமல் வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.
பலர் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக ஊழியர் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவும், அவர்கள் தற்போது மறைவில் இருந்தாலும், அவர்களின் இருப்பிடத்தை தாலிபான்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும் என்றே அஞ்சப்படுகிறது.
இதனிடையே, நடந்த தவறுக்கு பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நேராதவறு பார்த்துக்கொள்வதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.