தொடரும் தாலிபான்கள் அட்டூழியம்! ஆப்கான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் சித்திரவதை செய்து கொலை
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் துணை அதிபரின் சகோதர் ரோஹுல்லா சலேவை தாலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதத் தொடர்ந்து, அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர்.
அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபராக இருந்த அம்ருலே சாலே (Amrullah Saleh), அரசியலமைப்பின் சட்டப்படி தாமே அதிபர் எனக் கூறியிருந்தார்.
மேலும், அவரது தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை, பஞ்ச்ஷீர் பகுதியில் தாலிபான்களை எதிர்த்து போராடி வந்தது.
இந்நிலையில் பஞ்ச்ஷீர் பகுதியில் ஏற்பட்ட சண்டையில், அம்ருலே சாலேவின் சகோதரர் ரோஹுல்லா சாலேவை (Rohullah Saleh) தாலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்களுக்கு எதிராக போராடி ரோஹுல்லா சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக்கிற்கு எதிர்ப்பு படைகளுக்கு நெருக்கமான ஒரு ஆதாரம் தகவல் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பஞ்ச்ஷீரில் வசிக்கும் அம்ருல்லா சலே தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக செய்திகள் வந்தன. இதற்கிடையில், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் எதிர்ப்புத் தலைவரான அஹ்மத் மசூத்தின் நிலைமை குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
பஞ்ச்ஷீர் மாகாணத்தை, தாலிபான்கள் கைப்பற்றியதாக கூறியிருந்தாலும், தேசிய கிளர்ச்சிப் படையினர் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.