பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தி சித்ரவதை
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகெய்லின் (Najibullah Alikhil) மகள் சில்செலா அலிகெய்ல் (Silsila Alikhil, 27) இஸ்லாமாபாத்தில் கடத்தப்பட்டார்.
வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இஸ்லாமாபாத்தில் ராணா மார்க்கெட் அருகே அவர் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சில்செலா தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. இந்த கொடூரமான செயலை கடுமையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ட்வீட்டில், ஆப்கானிஸ்தான் தூதர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசியல் மற்றும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது என கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் தூதரகங்களின் முழு பாதுகாப்பையும், உறுதிப்படுத்த உடனடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேசி உள்ளது. குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் பிற நாட்டு தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இது போல் தாக்குதலுக்கு உள்ளாவது இது முதல் முறை அல்ல.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதர்கள் கடந்த காலங்களில் இதுபோன்ற துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். அங்கு இது ஒரு வகையான வழக்கமாக மாறியுள்ளது.