இரவோடு இரவாக வீட்டை முற்றுகையிட்ட தாலிபான்கள்: ஆப்கன் முதல் பெண் மேயரின் திகில் அனுபவம்
ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பியுள்ளார் நாட்டின் முதல் பெண் மேயர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நோக்கி தாலிபான்கள் படை முன்னேறிய நிலையில், நாட்டின் முதல் பெண் மேயரான 29 வயது Zarifa Ghafari தமது உயிருக்கு இனி உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.
இந்த நிலையில், அவரும் அவர் குடும்பமும் தாலிபான்களிடம் சிக்காமல் இருக்க, இரவோடு இரவாக ஜேர்மனிக்கு தப்பியது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதாக தகவல் வெளியான நிலையில், மேயர் Zarifa Ghafari-ஐ உடனடியாக வீட்டை விட்டு வெளியேற அவரது ஆதரவாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அவர்கள் அஞ்சியது போலவே, இரவோடு இரவாக அவரது குடியிருப்பை தாலிபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். மட்டுமின்றி, குடியிருப்பில் இருந்த காவலாளியை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
கடந்த 2018ல் இருந்தே தாலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்துள்ளார் Zarifa Ghafari. தாலிபான்கள் ஆதரவு மிகுந்த Maidan Shar பகுதியில் தமது 26வது வயதில் Zarifa Ghafari மேயராக பொறுப்பேற்றார்.
இரண்டாவது முறையாக தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், நாட்டைவிட்டு வெளியேறும் தருணம் நெருங்கியதை உணர்ந்ததாகவே அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 18ம் திகதி கார் ஒன்றை ஏற்பாடு செய்து, குடும்பத்துடன் காபூல் விமான நிலையம் சென்றுள்ளார். தாலிபான்களின் கண்ணில் சிக்காமல் இருக்க, காருக்குள் ஒளிந்து கொண்டு பயணம் செய்துள்ளார்.
தொடர்ந்து துருக்கிய தூதரக அதிகாரிகளே பத்திரமாக விமானத்தில் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ஜேர்மனியின் Düsseldorf நகரில் அச்சுறுத்தல் ஏதுமின்றி பத்திரமாக இருப்பதாக Zarifa Ghafari தெரிவித்துள்ளார்.