வீடியோ வெளியிட்டு உதவி கோரிய பெண் திடீர் மாயம்: தலிபான்களின் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் கல்வி மற்றும் வேலைக்கு செல்லும் அனுமதி கோரி போராடிய பெண்களை தலிபான்கள் வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் Tamana Zaryabi Paryani என்பவர் உட்பட பல பெண்கள் கல்வி மற்றும் வேலை செய்யும் உரிமை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, தலிபான்கள் pepper-spray தெளித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்புடைய பெண்கள் அனைவரும் குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால், புதன்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் Tamana Zaryabi Paryani குடியிருப்புக்கு சென்ற ஆயுததாரிகள் சிலர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால் குடியிருப்பின் கதவை திறக்க மறுத்த அவர், சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவி கேட்டு கதறியுள்ளார். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர், Tamana Zaryabi Paryani மற்றும் அவரது இரு சகோதரிகளை ஆயுததாரிகள் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல பெண்களை தலிபான்கள் வேட்டையாடி வருவதாகவும், பலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.