தாலிபான்கள் தான் எங்க கிட்ட சிக்கிக்கிட்டாங்க... தப்பி ஓடவில்லை: எதிர்ப்பு படையினர் வெளியிட்ட முக்கிய தகவல்
தாலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்ட அகமது மசூத் மற்றும் அமருல்லா சலே, குறித்து எதிர்ப்பு படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றி இருந்தாலும், அங்கிருக்கும் பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் தாலிபான்களை எதிர்க்கும் படையினர் கைவசம் இருந்தது.
இதனால் இதைக் கைப்பற்றுவதற்காக தாலிபான்கள் அப்பகுதியில் தாக்குதல் நடத்தினர். அதன் பின் அந்த மாகாணத்தை முழுவதையும், தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபான்கள் அறிவித்தனர்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு படை எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, பஞ்ச்சீர் மாகாணத்தில் செயல்படும் எதிர்ப்பு படைக்கு தேசிய எதிர்ப்பு கூட்டணி என்று பெயர் சூட்னர். இந்த படையின் தலைவராக அகமது மசூத் செயல்பட்டு வருகிறார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சலேவும் இந்த படையில் உள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் பஞ்ச்சீர் பகுதிக்குள் நுழைந்ததும் அகமது மசூத், அமருல்லா சலே இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக செய்தி வெளியானது.
அதாவது, இருவரும் தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்று, அங்கிருந்து துருக்கிக்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது. இதை தேசிய எதிர்ப்பு கூட்டணி மறுத்துள்ளது. இருவருமே பஞ்ச்சீர் பகுதியிலேயே தங்கி இருந்து எங்கள் படைகளை வழி நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அகமது மசூத்தின் நெருங்கிய கூட்டாளியான ஹசம் முகமது கூறுகையில், எங்கள் தலைவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று விடவில்லை.
அவர்கள் மக்களுடன்தான் இருக்கிறார்கள் நெடுஞ்சாலைகள், நகரப்பகுதிகள் ஆகியவற்றை மட்டுமே தலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். மீதி உள்ள இடங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
போர் தந்திரத்தின் அடிப்படையில்தான் நாங்கள் பின்வாங்கி சென்று தலிபான்களுக்கு வழி விட் டோம். அவர்கள் சிங்கத்தின் குகையில் சிக்கி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.