பிரியாணி விற்பனையில் ரூ.70,000 கோடி மோசடி - காட்டிக்கொடுத்த AI
பிரியாணி விற்பனையில் ரூ.70,000 கோடி மோசடி நடைபெற்றுள்ளதை AI தொழில்நுட்பம் மூலம் வருமானவரித்துறை கண்டறிந்துள்ளது.
பிரியாணியில் ரூ.70,000 கோடி மோசடி
இந்தியாவில் ஹைதராபாத் பிரியாணி, பிரியாணியின்பிரபல வகைகளில் ஒன்றாகும். கடந்த 2019 - 2020 நிதியாண்டு முதல் இந்த ஹைதராபாத் பிரியாணி உணவு சங்கிலி நிறுவனங்கள், ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பிற நகரங்களில் உள்ள உணவகங்களில் நடத்திய சோதனையில், பெரும்பாலான உணவகங்கள் விற்பனையை குறைத்து காட்டியது தெரிய வந்தது.
இதனையடுத்து பிரியாணி உணவகங்களின் மீதான விசாரணையை நாடு முழுவதும் விரிவுபடுத்தியது மத்திய நேரடி வரிகள் வாரியம்.
AI மூலம் ஆய்வு
இந்த விசாரணையில், AI மற்றும் தரவு பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி, நாடு முழுவதும் 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவக ஐடிகளை உள்ளடக்கிய POS லிருந்து சுமார் 60 TB பில்லிங் தரவை அதிகாரிகள் பகுப்பாய்வு செய்ததாக கூறப்படுகிறது.
வழக்கமாக ஊழியர்கள் பணம் மோசடி செய்வதை தடுக்க உணவகங்கள், UPI, கார்டு மற்றும் ரொக்கம் உள்ளிட்ட அனைத்து வகையான விற்பனைகளையும் மென்பொருளில் உள்ளீடு செய்வார்கள்.

ஆனால், வரி தாக்கல் செய்யும் போது ரொக்கமாக நடைபெற்ற விற்பனைகளின் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு பெரும்பாலான ரொக்க விற்பனைகளை மென்பொருளில் இருந்து நீக்கி, விற்பனையை குறைத்து காட்டியதாக தெரிய வந்துள்ளது.
கர்நாடகவில் அதிகபட்சமாக சுமார் ரூ.2,000 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. தெலங்கானாவில் ரூ.1,500 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடியும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
சில உணவகங்கள் பதிவுகளை நீக்காமலே, விற்பனையை குறைத்து காட்டியுள்ளன. நாடு முழுவதும் மொத்த விற்பனையில் சுமார் 27% நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்தில் உள்ள பில்லிங் மென்பொருள் வழங்குநரின் மையத்திலிருந்து தரவை புலனாய்வாளர்கள் அணுகி, ஹைதராபாத்தில் வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இது கண்டுபிடிப்பின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என தெரிவித்துள்ள அதிகாரிகள், பல பில்லிங் தளங்கள் இந்தத் துறையில் இயங்குகின்றன, அவையும் இதேபோன்ற ஆய்வுகளை எதிர்கொள்ளக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |