அநாகரீகம்.,என்னை கவலையடைய செய்கிறது: நடிகர் அஜித்குமார் அறிக்கை
சமீபமாக பொதுவெளியில் எழுப்பப்படும் 'க..அஜித்தே' என்ற கோஷம் என்னை கவலையுற செய்துள்ளது என நடிகர் அஜித் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் கோஷம்
பிரபல நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் திரையரங்கு உள்ளிட்ட பல இடங்களில் அவரது பெயரை குறிப்பிட்டு "கடவுளே...அஜித்தே.." என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களிலும் இதுதொடர்பான மீம்ஸ் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தனது பெயரை குறிப்பிட்டு கோஷம் எழுப்புவதை நிறுத்த வேண்டும் என நடிகர் அஜித் குமார் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் "க....அஜித்தே" என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.
நான் துளியும் உடன்படவில்லை
எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகாரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! வாழு, வாழ விடு" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |