தொடர் நாயகனாக வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது கொஞ்சம் கூட நியாயமில்ல! அக்தர் எதிர்ப்பு
2021 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அதிப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஷ்-க்கு வழங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலியா ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரி என 53 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு வார்னர் முக்கிய பங்காற்றினார்.
அதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 48.16 சராசரியுடன் கடைசி 3 போட்டிகளில் அரைசதம் விளாசிய வார்னர் மொத்தம் 289 ரன்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், 2021 டி20 உலகக் கோப்பையில் டேவிட் வார்னருக்குப் பதிலாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்தர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, பாபர் அசாம் டி20 உலகக்கோப்பை தொடர் நாயகன் விருது பெறுவார் என்று ஆசையோடு எதிர்பார்த்தேன். நிச்சயமாக இது நியாயமற்ற முடிவு என்று கூறியுள்ளார்.
Was really looking forward to see @babarazam258 becoming Man of the Tournament. Unfair decision for sure.
— Shoaib Akhtar (@shoaib100mph) November 14, 2021
டி20 உலகக் கோப்பையில் விளையாடி 6 இன்னிங்ஸில் 4 அரைசதங்களுடன் 303 ரன்கள் அடித்து, தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
பாபர் அசாமை தொடர்ந்து 7 இன்னிங்ஸில் 289 அடித்து வார்னர் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
2021 டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 303 ரன்கள் அடித்ததின் மூலம், ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியில் பாபர் அசாம் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பேட்ஸ்மேன் திலகரத்ன தில்ஷன் (2009ல் 317 ரன்கள்), இந்தியாவின் விராட் கோலி (2014ல் 319 ரன்கள்) ஆகியோர் மட்டுமே இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக 4 அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையும் பாபர் அசாம் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஹைடன், கோலி சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.