கிம் ஜோங் உன்னிற்கு துப்பாக்கியை பரிசளித்த ஐரோப்பிய நாடொன்றின் தலைவர்
பெலாரஸுக்கு முழு ஆதரவை தருவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அந்நாட்டின் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ பயணம்
பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக வடகொரியாவிற்கு சென்றுள்ளார்.
தலைநகர் பியோங்யாங்கில் கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சிகளில் லுகாஷென்கோ கலந்துகொண்டார்.
இரு நாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். கிம்மிற்கு பெலாரஸில் தயாரிக்கப்பட்ட ஒரு தாக்குதல் துப்பாக்கி உள்ளிட்ட பிற பொருட்களை லுகாஷென்கோ பரிசளித்தார்.

அதேபோல் லுகாஷென்கோவிற்கு ஒரு வாளையும், பெலாரஸ் தலைவரின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய குவளையையும் கிம் வழங்கினார்.
சட்டவிரோத அழுத்தத்திற்கு எதிராக கிம்
பின்னர் பெலாரஸுக்கு ஒற்றுமை மற்றும் முழு ஆதரவை வழங்குவதாகவும், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெலாரஸ் மீது செலுத்தப்படும் சட்டவிரோத அழுத்தத்திற்கு எதிராக கிம் குரல் எழுப்பியதாகவும் லுகாஷென்கோ தெரிவித்தார்.
மேலும் அவர், "பெரும்பாலும் எங்கள் தவறு காரணமாக, எங்களுக்கு நெருங்கிய ஒத்துழைப்பு இருக்கவில்லை. ஆனால், தற்போது ஒத்துழைப்பு கணிசமாக தீவிரமடைந்துள்ளதைக் குறிப்பிடுவதில் நான் மனப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன்" என்றும் தெரிவித்தார்.

வடகொரிய தலைவர் கிம்மும், பெலாரஸ் தலைவர் லுகாஷென்கோவும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பிற குறிப்பிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இருவரும் கையெழுத்திட்டனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |