கொரோனா தொற்றை வெறும் காய்ச்சலாக கருத வேண்டும்: பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர்
கொரோனா தொற்றின் வீரியம் மிகவும் சரிவடைந்து காணப்படுவதால், வெறும் குளிர் காய்ச்சலுக்கு அளிக்கும் முக்கியத்துவம் மட்டும் அளிக்கலாமா என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்பெயின் பிரதமர் முன்வைத்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், கொரோனா தொற்றின் இறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், விரிவான கண்காணிப்பு எதுவும் இனித் தேவைப்படாது எனவும், பொதுவான காய்ச்சலுக்கு அளிக்கும் அதே முக்கியத்துவம் அளிக்கலாமா என்பது தொடர்பில் ஐரோப்பிய அதிகாரிகள் விவாதிக்க வேண்டும் என்றார்.
அவ்வாறான ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், கொரோனா தொற்றை பெருந்தொற்றாக கருதாமல், குளிர் காய்ச்சலாக மட்டுமே கருதினால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுநோய் பரவல் தொடங்கியதில் இருந்து பதிவு செய்யப்பட்ட பாதிப்பு எண்ணிக்கையின் விகிதத்தில் இறப்புகள் வியத்தகு அளவில் குறைந்துள்ளன. இந்த நிலையில் நாம் மெதுவாக, கொரோனா தொற்றை வெறும் காய்ச்சலாக கருதலாமா என்பது தொடர்பில் விவாதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் மட்டுமல்ல, இந்த விவகாரத்தை ஐரோப்பிய நாடுகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில பிரதிநிதிகளுடன் இந்த விவகாரத்தை விவாதித்துள்ளதாகவும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டிருந்தும், கொரோனா பரவல் இதுவரை கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.