80 நீர்யானைகளை கொல்ல முடிவெடுத்த அரசு - ஆனந்த் அம்பானி விடுத்த வேண்டுகோள்
80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா திட்டமிட்டுள்ள நிலையில், அதனை காப்பாற்ற ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார்.
நீர் யானைகளை கொல்ல உள்ள கொலம்பியா
கொலம்பியவை சேர்ந்த போதைப்பொருள் மன்னனான பாப்லோ யெஸ்கொபர், அவருக்கு சொந்தமான பண்ணையில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல அரிய வகை விலங்குகளை இறக்குமதி செய்து பராமரித்து வந்தார்.
1993 ஆம் ஆண்டு அவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்த விலங்குகள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

கொலம்பியாவின் பிரதான நதியான மக்தலேனா பகுதியில், சுமார் 200 நீர் யானைகள் பெருகியதாகக் கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 5,00 ஆக உயர்ந்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த நதியில் மீன் பிடிக்க வரும் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதோடு, ஆற்று பகுதியையும் அழித்து வருவதாக கூறப்பட்டது.
அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, கருத்தடைத் திட்டங்கள், இடமாற்ற முயற்சிகள் உள்ளிட்ட வழிகளை முயன்று பார்த்தும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அதில் உள்ள 80 நீர் யானைகளை கொல்ல கொலம்பிய அரசு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அரசின் இந்த முடிவு விலங்கு நல ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த் அம்பானி முயற்சி
இதனை தொடர்ந்து, அந்த விலங்குகளை காப்பாற்ற கொலம்பிய சுற்றுசூழல் அமைச்சருக்கு ஆனந்த் அம்பானி கடிதம் எழுதியுள்ளார்.

இதில், "குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள தனது வன்தாரா (Vantara) வன்தாரா உலகின் மிகப் பெரிய வனவிலங்கு மீட்பு மையங்களில் ஒன்றாக உள்ளது. நீர் யானைகளை பராமரிப்பதற்கு இங்கு அனைத்து வசதிகளும் உள்ளது.
அறிவியல் அடிப்படையிலான திட்டமிடல், கால்நடை மருத்துவ கண்காணிப்பு, பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் நீண்டகால பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் வந்தாரா ஏற்கும்.
கொலம்பிய அரசின் அனுமதியுடன், சர்வதேச தரநிலைகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஜாம் நகரில், சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை ரிலையன்ஸ் குழுமம் நிர்வகித்து வருகிறது. இங்கு சுமார் 2,000 வகையான உயிரினங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |