அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து விபத்து... சுமார் 250 அகதிகள் மாயம்
அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேச மக்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், சுமார் 250 பேர் காணாமல் போயுள்ளனர்.
மலேசியாவை நோக்கி
ஐ.நா.வின் அகதிகள் மற்றும் இடம்பெயர்வு முகமைகள் வெளியிட்டுள்ள தகவலில், 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிப் படகு, மோசமான வானிலை மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

குறித்த படகானது தெற்கு வங்காளதேசத்தில் உள்ள டெக்னாஃபிலிருந்து புறப்பட்டு மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மியான்மரின் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்கள், நாட்டில் நிலவும் அடக்குமுறை மற்றும் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பித்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.
அவர்கள் கடல் வழியாக, பெரும்பாலும் தற்காலிகப் படகுகளில் பயணம் செய்கிறார்கள். விபத்துக்குள்ளான இந்தப் படகில் இருந்தவர்கள், அநேகமாக தென்கிழக்கு வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜாரில் இருக்கும் பிரம்மாண்டமான முகாம்களை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அங்கு, மியான்மரின் மேற்கு மாகாணமான ரக்கைனிலிருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பத்து லட்சத்திற்கும் அதிகமான அகதிகள், சுகாதாரமற்ற மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
ரக்கைன் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டிற்காக, இராணுவத்திற்கும், சிறுபான்மை இனக் கிளர்ச்சிக் குழுவான அரக்கான் இராணுவத்திற்கும் இடையே அங்கு கடுமையான சண்டைகள் நடந்து வருகின்றன.
சமீபத்திய சம்பவம் தொடர்பான சரியான தகவல் வெளியாகாத நிலையில், முதற்கட்ட தகவல்களின்படி, அந்தப் படகில் சுமார் 280 பேர் இருந்ததாகவும், அது ஏப்ரல் 4 ஆம் திகதி வங்கதேசத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரியவந்தது.
அகதிகள் முகாம்
பல ஆண்டுகளாக, மியான்மரில் ஏற்படும் துன்புறுத்தல்களிலிருந்தோ அல்லது வங்கதேசத்தில் உள்ள நெரிசல் மிகுந்த அகதிகள் முகாம்களிலிருந்தோ தப்பிக்கும் முயற்சியில், பல ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பற்ற மரப் படகுகளில் ஏறி, மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளை அடைய முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கான உயிர் காக்கும் உதவிகளுக்கும், அவர்களை ஏற்றுக்கொண்ட வங்கதேச சமூகங்களுக்கான ஆதரவிற்கும் வழங்கப்படும் நிதியை அதிகரித்து நிலைநிறுத்துமாறு ஐ.நா.வின் அகதிகள் மற்றும் இடம்பெயர்வு முகமைகள் சர்வதேச சமூகத்தைக் கேட்டுக்கொண்டன.

2017-ஆம் ஆண்டில், மியான்மரின் ஆயுதப் படைகள் தொடுத்த தாக்குதலில், குறைந்தது 730,000 ரோஹிங்கியாக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் தள்ளப்பட்டனர்.
அங்கு அவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொலைகள், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கைதுகள் குறித்து அம்பலப்படுத்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |