எப்ஸ்டீன் விவகாரம்... சார்லஸ் மன்னரின் சகோதருக்கு இறுகும் நெருக்கடி
எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பில் சாட்சியமளிக்க சார்லஸ் மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிப்படைத்தன்மை
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் தொடர்புகள் குறித்து அமெரிக்காவில் சாட்சியமளிக்க அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ள வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்திரும் அழுத்தமளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரித்தானியாவின் அரச குடும்பம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட மறுக்கிறது என்று ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்னொரு ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தெரசா லெகர் பெர்னாண்டஸ் என்பவரும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க தமது சகோதருக்கு மன்னர் சார்லஸ் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
ஆனால், செவ்வாய்க்கிழமை, எப்ஸ்டீன் விவகாரத்தில் ஒத்துழைக்க அரச குடும்பத்தினர் தயாராக இருப்பதாக மன்னர் சார்லஸ் வெளிப்படையாகக் கூறியிருந்தார். எப்ஸ்டீன் விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றே ஆண்ட்ரூ தொடர்ந்து கூறி வருகிறார்.
அத்துடன், கியூஃப்ரே தொடர்ந்த வழக்கில் கடந்த 2022ல் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தீர்வையும் எட்டியிருந்தார். இதனிடையே, எப்ஸ்டீனிடம் ஆண்ட்ரூ பகிர்ந்ததாக கூறப்படும் தரவுகள் தொடர்பிலான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என Thames Valley பொலிசார் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.
முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வர்த்தக தூதராக தனது அதிகாரப்பூர்வ பணியின் போது எப்ஸ்டீனுடன் ரகசிய தகவல்களை தெரிந்தே பகிர்ந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இழப்பீடு வழங்கியிருக்க
ஆண்ட்ரூ அமெரிக்காவில் சென்று, முறையாக விளக்கமளிக்க வேண்டும் என்றே அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, அரச குடும்பத்தினர் வெளிப்படையாக வந்து, தங்களுக்கு என்ன தெரியும், என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை வெளியிட வேண்டும் என ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அவர்களிடம் ஏராளமான சொத்து இருக்கிறது, நடந்த கொடூரங்களுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மூன்று மில்லியன் ஆவணங்கள் இதுவரை வெளியிடப்பட்டதிலிருந்து, ஆண்ட்ரூ மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.
ஆனால், ஆண்ட்ரூ எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்தும் உறுதியாகவும் மறுத்து வருகிறார். எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயர் இருப்பது தவறான நடத்தைக்கான அறிகுறியல்ல என்றும் அவர் வாதிட்டு வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |