ஏஞ்சலா மெர்க்கல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா: கொரோனா பரவலின்போது ஊழல் செய்ததாக புகார்
கொரோனா பரவலின்போது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
Nikolas Löbel (34) என்னும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா பரவலின்போது அரசுக்கு மாஸ்க் விற்றதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது நிறுவனம் அரசுக்கு மாஸ்க் விற்றதில் 250,000 யூரோக்கள் லாபம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து, அவர் CDU கட்சியிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து மூத்த அரசியல்வாதிகள் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கோரினர்..
ஆகவே, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக தான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் Löbel.
Löbelஐப் போலவே, CSU கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Georg Nüsslein என்பவர் மீதும் ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இந்த ஆண்டு, வரும் செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.