98 சதவீதம் அழிந்த மனித இனம்; தப்பித்த வெறும் 1280 பேர் - எப்போது நடந்தது தெரியுமா?
உலகில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வசித்து வரும் நிலையில், தற்போது மனிதர்களின் எண்ணிக்கை 823 கோடியாக அதிகரித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, உலகை மேம்படுத்தி வரும் மனிதர்கள், கடந்த காலம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பித்த 1280 மனிதர்கள்
அதன்படி, ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் தற்கால மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு, ஆப்பிரிக்காவில் இருந்த மனித மூதாதையர்கள் குறித்த ஆய்வை சீனா, இத்தாலி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சுமார் 3,154 மனிதர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அதை கணினி மாடல் மூலம் பகுப்பாய்வு செய்ததில், முன்னொரு காலத்தில் மனித இனம் ஏற்குறைறைய அழிவின் விளிம்பிற்கு சென்றது தெரிய வந்துள்ளது.
அதாவது, சுமார் 8 முதல் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த மனித இனம் 98.7 சதவீதம் அழிவை சந்தித்தது தெரிய வந்துள்ளது.
இதில், வெறும் 1280 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1,17,000 ஆண்டுகளுக்கு இந்த நிலையே நீடித்ததாக கூறப்படுகிறது.
இது தற்கால மனிதர்களுக்கும், நியாண்டர்தால்களுக்கும் பொதுவான மூதாதையராக இருந்த ஒரு புதிய ஹோமினின் இனத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்திருக்கலாம்.
என்ன காரணம்?
திடீரென ஏற்பட்ட இந்த மக்கள்தொகை வீழ்ச்சிக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், ஆப்பிரிக்காவின் மோசமான காலநிலையே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் நடுப்பகுதியில் ஆப்பிரிக்க கண்டம் மிகவும் குளிராகவும் வறண்டதாகவும் மாறியது. பனிப்பாறை காலங்கள் நீண்டதாகவும் தீவிரமாகவும் மாறின, இதனால் வெப்பநிலை குறைந்து மிகவும் வறண்ட காலநிலை நிலவியது. இதுவே இந்த திடீர் அழிவுக்கு காரணமாக கருதப்படுகிறது.
பேரழிவு தரும் காலநிலை மாற்றங்களை அந்த மனிதர்கள் எவ்வாறு சமாளித்தார்கள், இந்த நெருக்கடி மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்தியதா என்பது போன்ற பல கேள்விகளை இந்த ஆய்வு முடிவு எழுப்புவதாக பரிணாம மற்றும் செயல்பாட்டு மரபியல் நிபுணர் யி-ஹுவான் பான் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |