மீண்டும் ஒரு ஆசிய பெண்மணி மீது தாக்குதல்... பெண்ணை மிதித்து இடுப்பை உடைப்பதை வேடிக்கை பார்த்த பாதுகாவலர்கள்
அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆசிய பெண்மணி தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவாமல் இரண்டு செக்யூரிட்டி கார்டுகள் வேடிக்கை பார்த்த அராஜக செயல் ஒன்று அரங்கேறியுள்ளது.
மன்ஹாட்டன் பகுதியில், 65 வயது ஆசிய பெண்மணி ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, அவருக்கு எதிரே வந்த கருப்பினத்தவர் ஒருவர் அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், அவரை கொடூரமாக தாக்கியும் உள்ளார்.
அருகிலுள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கமெரா ஒன்றில் இந்த கொடூர காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த நபர் மிருகத்தனமாக அந்த பெண்மணியை மிதிக்க, தூரச் சென்று விழுகிறார் அந்த பெண்மணி.
பின்னர் அந்த பெண்மணியை மீண்டும் மீண்டும் தலையிலேயே மிதிக்கிறார் அந்த நபர். தொடர்ந்து அந்த பெண்ணின் இடுப்பிலும் ஓங்கி ஓங்கி மிதித்துவிட்டு, எதுவுமே நடக்காததுபோல சென்று விடுகிறார் அந்த கருப்பினத்தவர்.
அந்த பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், பலத்த காயமடைந்த அந்த பெண்ணின் இடுப்பெலும்பும் முறிந்துள்ளது.
இதில் கொந்தளிக்கச் செய்யும் விடயம் என்னவென்றால், எந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள கமெராவில் இந்த காட்சிகள் பொருத்தப்பட்டுள்ளனவோ, அதே கடையில் நின்று செக்யூரிட்டி கார்டுகள் இருவர் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான்.
மரம் போல அசையாமல் நின்று அந்த செக்யூரிட்டி கார்டுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அதில் ஒருவர் மெதுவாக சென்று கதவையும் மூடிவிடுகிறார்.
இருவருமே அந்த பெண்ணைக் காப்பாற்றவோ, அல்லது தாக்குதல் நடத்தும் ஆணை துரத்தவோ முயலவில்லை.
பொலிசார் CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவரைத் தேடிவருகிறார்கள்.
அமெரிக்காவில் ஆசியர்களின் நிலைமை மோசமடைந்துகொண்டே வரும் நிலையில், தட்டிக் கேட்பார் யாருமில்லை என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

