ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு
நேட்டோ அமைப்பில் இணைந்தால் பத்தே விநாடிகளில் அணு ஆயுதத்தால் தாக்கி அழித்துவிடுவோம் என பின்லாந்துக்கு ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ள நிலையிலும், பின்லாந்தைத் தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளது.
பின்லாந்தும் ஸ்வீடனும் நீண்ட காலமாகவே நேட்டோ அமைப்பில் இணைவதைத் தவிர்த்து நடுநிலை வகித்துவந்தன.
ஆனால், திடீரென புடின் உக்ரைனை ஊடுருவினார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அந்த அமைப்பு மேலும் வலுவாகும் என்பதால், இனி எந்த நாடும் நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என எச்சரிப்பதற்காகவே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.
ஆனால், புடின் நினைத்ததற்கு நேர்மாறாக, அவர் உக்ரைன் மீது போர் தொடுத்ததாலேயே, அவர் தங்கள் மீதும் போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்துவிட்டன.
இன்று ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் அந்நாடு நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பிபர்களின் ஒப்புதலைப் பெற்றபின் முறைப்படி ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பிக்க உள்ளது.
இதுவரை நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ஸ்வீடனில் Social Democrats கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்த சில மணி நேரங்களுக்குள், அவர்களும் தங்கள் எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டனர்.
ஆக, ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், நாடாளுமன்ற விவாதத்திற்குப் பின் இன்று ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பம் அளிக்க தடையேதும் இருக்கப்போவதில்லை.
இதற்கிடையில், பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைந்தபின் தங்கள் நாடுகளில் நேட்டோ இராணுவ தளங்களை அமைக்க அந்நாடுகள் அனுமதிக்குமானால், ரஷ்யா தனது ஐரோப்பிய எல்லையில் தனது அணு ஆயுதங்களைக் குவிக்கும் என புடின் ஆதரவு ரஷ்ய தொலைக்காட்சி மிரட்டல் விடுத்துள்ளது.