புடினுக்கு பாடம் கற்பிக்க துப்பாக்கிகள் வாங்கிக் குவிக்கும் மற்றொரு நாட்டின் குடிமக்கள்: ஏழு வயது சிறுவர்கள் துப்பாக்கி சுட பயிற்சி
உக்ரைனை ஊடுருவியது போல தங்கள் நாட்டை ஊடுருவ புடின் நினைத்தால், அவருக்கு சரியான பாடம் கற்பிக்கத் தயாராகி வருகிறார்களாம் பின்லாந்து நாட்டவர்கள்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளைத் துவங்கியதும், அதையும் மற்ற நாடுகளையும் எச்சரிப்பதற்காக உக்ரைன் மீது போர் தொடுத்தார் புடின்.
ஆனால், மற்ற நாடுகள் பயந்து நேட்டோ அமைப்பில் இணைவதைக் கைவிடுவதற்கு பதிலாக, உக்ரைனைப் போலவே புடின் நம் நாட்டையும் ஊடுருவினால் என்ன செய்வது என்று எண்ணி, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை அவசர அவசரமாக துவக்கியுள்ளன.
குறிப்பாக, பின்லாந்தும், ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பங்களை அளித்தாயிற்று.
இந்நிலையில், நேட்டோவில் இணைய பின்லாந்து முயற்சி செய்துவருவதால், ஒருவேளை புடின் பின்லாந்துக்குள் ஊடுருவ முயன்றால் என்ன செய்வது என்று எண்ணி, பின்லாந்து மக்கள் துப்பாக்கிகளை வாங்கிக் குவித்து வருகிறார்கள்.
ஏழு வயது சிறுவர்கள் முதல் துப்பாக்கி சுடும் வகுப்புகளில் இணைந்துவருவதாக துப்பாக்கிகள் விற்கும் கடை ஒன்றின் உரிமையாளரான Matty Myllynen என்பவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பின்லாந்து வரலாற்றில், 1939ஆம் ஆண்டு பின்லாந்துக்குள் ஊடுருவ முயன்ற ரஷ்யப் படையினரை ஓட ஓட துரத்திய பின்லாந்து வீரர் ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு, ரஷ்யாவுக்கு மீண்டும் பாடம் புகட்டத் தயாராகி வருகிறார்களாம் பின்லாந்து மக்கள்.
White Death என்ற பெயரைக் கேட்டாலே, இன்றும் ரஷ்ய வீரர்கள் திகிலடைவார்களாம். அப்படி ரஷ்ய வீரர்களைக் கலங்கடித்த அந்த பின்லாந்து வீரரின் பெயர் Simo Hayha.
White Death என்ற பெயரில் அழைக்கப்படும் Simo Hayha, ஒற்றை ஆளாக, 98 நாட்களில் 500 ரஷ்யப் படைவீரர்களைக் கொன்றாராம்.
வெண்ணிற ஆடை அணிந்து பனியில் பதுக்கி, கொஞ்சமே சாப்பிட்டு, காத்திருந்து ரஷ்யப் படைவீரர்களைக் கொன்ற Simoவின் கன்னத்தில் குண்டு ஒன்று பாய்ந்ததால் பிறகு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர், தனக்கு பதக்கங்களும் பாராட்டும் வேண்டாம் என மறுத்துவிட்டாராம் எளிமையான Simo. ஒரு பக்கம் மக்கள் புகழை விரும்பாத அவரது எளிமையைப் பாராட்ட, மறுபக்கமோ, Simoவுக்கு பாராட்டுக் கூட்டங்கள் நடக்கும்போது அவரைக் கொன்று விடலாம் என திட்டமிட்டிருந்த கொலையாளிகள் அவர் கௌரவங்களை ஏற்க வராததால் எரிச்சலடைந்திருக்கிறார்கள்.
தற்போது பின்லாந்து மக்கள் இந்த Simoவின் வீரத்தைத்தான் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு புடினுக்கு பாடம் புகட்ட தயாராகிவருகிறார்களாம்.