ஜனாதிபதி டிரம்புக்கு இன்னொரு பேரிடி... காலவரையின்றி முடக்கப்பட்டார்: வெளியான அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது, புதன்கிழமை நடந்த சம்பவத்திற்கு பிறகு கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதன்கிழமை ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் முற்றுகையிடப்பட்ட நிலையில், தமது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி டிரம்ப் காணொளி ஒன்றை பதிவிட்டு, தமது ஆதரவாளர்களை அமைதிகாக்க கோரினார்.
ஆனால் அத்துடன், ஜனாதிபதி தேர்தல் ஒரு மோசடி எனவும், வெற்றி பறிக்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட டுவிட்டர் நிர்வாகம், அந்த காணொளியை நீக்குமாறு கட்டாயப்படுத்தியதுடன், அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டது.
மட்டுமின்றி, பொய்யான தகவலை பரப்பியதுடன், வன்முறைக்கு தூண்டியதாகவும் கூறி, டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கை 12 மணி நேரத்திற்கு முடக்கியது.
இந்த நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனமானது டொனால்டு டிரம்பின் கணக்கை காலவரையின்றி முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள பேஸ்புக் நிறுவனர், அந்த காட்சிகள் அதிர்ச்சி தருவதாக அமைந்தது எனவும் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே டொனால்டு டிரம்பை பதவி நீக்கம் செய்யும் பொருட்டு, அவரது அமைச்சரவை உறுப்பினர்களே நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
