அண்டார்டிகாவில்... பிரான்ஸ் நாட்டின் பரப்பளவுக்கு இணையான பனிக்கட்டிப் பகுதி மாயம்
அண்டார்டிகாவின் மேற்கு கடற்கரையில், பிரான்ஸ் நாட்டின் பரப்பளவுக்குச் சமமான குளிர்காலக் கடல் பனிப் பகுதி மாயமாகியுள்ளது.
வெப்ப அலை
இச்சம்பவம், அழிவின் விளிம்பில் உள்ள பெங்குவின்கள், பிற கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் உலகளாவிய கடல் மட்டம் ஆகியவை குறித்த கவலைகளை தூண்டியுள்ளது.

பெல்லிங்ஹவுசன் கடலில் பனி உருகுவது கவலையளிப்பதாகவும், பனி உருவாகாதது கடந்த வாரம் கண்டத்தின் தீபகற்பப் பகுதியில் ஏற்பட்ட வெப்ப அலையைத் தீவிரப்படுத்தியிருக்கக்கூடும் என்றும் ஒரு நிபுணர் கூறினார்.
அந்த வெப்ப அலையின்போது பகல்நேர வெப்பநிலை 15.4 டிகிரி செல்சியஸை எட்டியது; இது சராசரி அளவை விட 20 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகும்.
அண்டார்டிகாவில் தற்போது குளிர்காலம்; இக்காலகட்டத்தில் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் பனி வேகமாக விரிவடைந்து, செப்டம்பர் மாதத்தில் அதன் உச்சத்தை அடைகிறது.
ஆனால், அண்டார்டிக் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளதும், வழக்கமாக ஜூன் மாதத்தில் பனியால் மூடப்பட்டிருக்கக்கூடியதுமான பெல்லிங்ஹவுசன் கடல், கிட்டத்தட்ட முழுவதுமாகப் பனியில்லாமல் இருந்தது என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளன.
10 மடங்கு பெரியது
1991 முதல் 2020 வரையிலான சராசரியுடன் ஒப்பிடுகையில், அப்பகுதியில் சுமார் 650,000 சதுர கிலோமீட்டர் (250,000 சதுர மைல்கள்) கடல் பனி காணாமல் போயிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அது பிரான்சின் பரப்பளவுக்குச் சமமானதும், டாஸ்மேனியாவின் பரப்பளவை விட கிட்டத்தட்ட 10 மடங்கு பெரியதுமான ஒரு பகுதியாகும்.
ஜூன் 10 அன்று, முழு கண்டத்தையும் சுற்றி சுமார் 11.4 மில்லியன் சதுர கிலோமீற்றர் கடல் பனி இருந்தது. இது, அந்தத் திகதிக்கான நீண்ட கால சராசரியான 12.6 மில்லியன் சதுர கிலோமீற்றருடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பெல்லிங்ஹவுசன் கடலின் கடற்கரையில் உள்ள நான்கு பென்குவின் கூட்டங்களில் ஏற்பட்ட ஒரு பேரழிவு தரும் இனப்பெருக்கத் தோல்வியின் காரணமாக ஆயிரக்கணக்கான பேரரசப் பென்குவின் குஞ்சுகள் உயிரிழந்தன.
இது அந்தப் பகுதியின் ஒரு துயரச் சம்பவமாக அமைந்தது. இதனிடையே, அர்ஜென்டினாவின் தேசிய வானிலை சேவை அதிகாரிகள், தீபகற்பத்தின் வடகிழக்கு முனையில் உள்ள அந்நாட்டின் எஸ்பெரான்சா தளத்தில், ஜூன் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் உச்சத்தை எட்டிய ஒரு கடுமையான வெப்பநிலை நிகழ்வு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |