நீங்கள் எனது அப்பா இல்லை.... கதறிய சிறுவன்: மர்ம நபரை தீவிரமாக தேடும் பிரித்தானிய பொலிஸ்
பிரித்தானியாவில் மான்செஸ்டர் பகுதியில் சிறுவனை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படும் மர்ம நபர் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஆறு அல்லது 7 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுவன், நீங்கள் எனது தந்தை அல்ல, என்னை தனியாக விட்டுவிடுங்கள் என கதறியதை வழிபோக்கர் ஒருவர் கவனித்துள்ளார்.
இதனையடுத்தே, சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபர் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுவனை கடத்தியதாக கூறப்படும் நபர் கிழக்கு ஐரோப்பிய சாயலில் இருந்ததாகவும், இரண்டு குப்பை சேகரிப்பும் பைகளை வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஞாயிறன்று பிற்பகல் மான்செஸ்டர் சிட்டி செண்டரின் வடகிழக்கில் உள்ள ஏஞ்சல் மெடோ பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை அந்த மர்ம நபரையும் சிறுவனையும் கண்டுபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்த மர்ம நபர் 30 வயதை கடந்தவராக இருக்கலாம் எனவும், நீல வண்ணத்தின் ஜீன்ஸ் அணிந்து, கடுகு மஞ்சள் நிறத்தில் பஃபர் கோட் அணிந்துள்ளார் எனவும் கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கடைசியாக மான்செஸ்டரின் ஏஞ்சல் மெடோஸ் பகுதியை நோக்கி நடந்து செல்வதைக் காண முடிந்தது எனவும், ஒருவேளை விக்டோரியா நிலையத்தை நோக்கி செல்வதாக இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.