ஆப்பிள் நிறுவனம் பாகிஸ்தானில் iPhone உற்பத்தி செய்ய திட்டம்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், பாகிஸ்தானில் iPhone உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அரசு, புதிய மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கொள்கை மூலம் ஆப்பிளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அந்தக் கொள்கையின் கீழ், ஆப்பிள் பாகிஸ்தானில் பழைய iPhone-களை (2-3 ஆண்டுகள் பழையவை) புதுப்பித்து மீண்டும் ஏற்றுமதி செய்யும்.
இதன் மூலம் முதல் ஆண்டில் மட்டும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள், பாகிஸ்தானில் நிலம் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டும், 8 சதவீத செயல்திறன் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும், பழைய iPhone-களை சரிசெய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.
இவை அனைத்தும் புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொறியியல் மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமத் அலி மான்சூர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் ஆப்பிள் இதே மாதிரியில் ஆரம்பித்து, பின்னர் உற்பத்தி விரிவாக்கம் செய்தது. பாகிஸ்தானிலும் அதே திட்டம் நடைமுறைக்கு வரும்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு, சீன நிறுவனங்களிடமிருந்து 557 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு வருவதாகவும், எதிர்காலத்தில் லாப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், டிராக்கர், எயர் பட்ஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியும் விரிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், பாகிஸ்தானை மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |