ஜேர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் நிலை என்ன?
2022ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் மட்டும் குடியுரிமைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போரின் எண்ணிக்கை 27,000.
இப்போதைக்கு பெர்லினில் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர், ஜேர்மன் பாஸ்போர்ட் பெற சராசரியாக 2.4ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்கின்றார்கள் உள்ளூர் அதிகாரிகள்.
2023இல் விண்ணப்பித்தவர்களின் நிலை என்ன?
2022இல் விண்ணப்பித்தவர்களே காத்திருக்கும் நிலையில், 2023இல் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் நிலையை சொல்லவா வேண்டும்? அவர்கள் புதிய புலம்பெயர்தல் அலுவலகம் ஒன்றிற்காக காத்திருப்பதால், அவர்களுடைய விண்ணப்பங்கள் அந்த அலுவலகம் அமைக்கப்பட்ட பின்பே பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
picture alliance/dpa | Fabian Sommer
அந்த அலுவலகம் 2024இல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆண்டொன்றிற்கு 8,000 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் நிலையில், புதிய அலுவலகம் திறக்கப்படும் பட்சத்தில், ஆண்டொன்றிற்கு 20,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என நகர அரசு உறுதியளித்துள்ளது.
நிலைமை மேலும் மோசமாகலாம்
ஆனால், இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் வகையில் அரசு இந்த ஆண்டு சட்டம் கொண்டு வர முயற்சித்துக்கொண்டுள்ளதாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு முன் ஒருவர் ஜேர்மனியில் வாழும் காலமான எட்டு ஆண்டுகள் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட உள்ளதாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரிக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
பெர்லினில் மட்டுமே, ஜேர்மனியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 250,000. குடியுரிமைக்கு விண்ணப்பித்தால் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்கவேண்டியிருக்கும் என்பதால் ஏராளமானோர் இதுவரை ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை.
ஆக, இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் வகையில் சட்டம் வருமானால், மேலும் ஏராளமானோர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கக்கூடும் என்பதால் நிலைமை மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.