தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய்க்கும் 2 மாத குழந்தைக்கும் நேர்ந்த துயரம்! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் தாய் இறந்துபோனதால், குழந்தையும் மூச்சுத் திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் Corrientes மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்துள்ளது.
இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 குழந்தைகளுக்கு தாயான Mariana Ojeda (30), சம்பவம் நடந்த அன்று தனது 3 வயது மகன் மற்றும் 2 மாத பெண் குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அவர் தனது மூத்த மகளை தனது உறவினர் வீட்டில் விட்டிருந்தார். அவரை மாலை தன்னுடன் அழைத்துச்செல்வதாக மரியானா கூறியிருந்தார்.
இந்த நிலையில், மகளை அழைத்துச் செல்ல மரியானா மாலை வீட்டுக்கு வரவில்லை என்பதால், அவருக்கு உறவினர்கள் தொலைபேசியில் அழைத்துள்ளனர்.
பல முறை முயற்சி செய்தும், அவர் அழைப்பை எடுக்காததால், உறவினர்கள் மரியானாவின் கணவர் கேப்ரியலுக்கு (47) தகவல் கொடுத்துள்ளனர்.
அப்போது, கேப்ரியல் தனது மனைவிக்கு தொடர்ந்து போன் அடித்துள்ளார். அப்போது அவர்களது 3 வயது மகன் போனை எடுத்துள்ளார்.
அம்மா எங்கே என கேபிரியல் கேட்டபோது, அம்மா ரொம்ப நேரமாக தூங்கிக்கொண்டு இருக்கிறார் என குழந்தை பதிலளித்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த கேப்ரியல், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது மரியானாவும் அவரது 2 மாத குழந்தையும் மெத்தையில் மயங்கி கிடப்பதை பார்த்து பதற்றம் அடைந்துள்ளார். குழந்தையின் உடல் நீல நிறத்திலும், மரியானாவின் உடன் குளிர்ச்சியாக இருந்த நிலையில், அவர்கள் இருவரும் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர் பொலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தாக்கப்பட்டதாக வீட்டில் எந்த அறிகுறியும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையின் படி, மரியானா உயர் இரத்த அழுத்தம் (Hypertension) காரணமாக அதிர்ச்சி நிலைக்கு சென்று மரணம் அடைந்திருக்கலாம், பின்னர் அவர் இறந்ததால், அவரிடம் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.