இஸ்ரேல் ஆதரவு பேரணியில் தீ வைப்பு: கொலராடோவில் 6 பேர் காயம்
கொலராடோவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் 6 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ஆதரவு பேரணியில் சலசலப்பு
காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூரும் வகையில் கொலராடோவின் போல்டரில் நடைபெற்ற பேரணி ஒன்றில், கூடியிருந்த மக்கள் மீது ஒரு நபர் எரியக்கூடிய திரவத்தை வீசி தீ வைத்ததில், ஆறு பேர் காயமடைந்தனர்.
இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
போல்டர் காவல்துறைத் தலைவர் ஸ்டீபன் ரெட்ஃபியர்ன் தெரிவித்தபடி, சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 67 முதல் 88 வயதுக்குட்பட்ட ஆறு பாதிக்கப்பட்டவர்களும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் கைது
இந்தத் தாக்குதல் தொடர்பாக முகமது சப்ரி சோலிமான் என்பவரை அதிகாரிகள் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
தாக்குதலை நடத்தியபோது சோலிமான் "பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கோஷமிட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் ஒரு தீவிர குற்றமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் இந்தத் தாக்குதலை "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயல்" என்று வர்ணித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |